பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு நிறுத்தம்
By DIN | Published On : 26th January 2022 07:20 AM | Last Updated : 26th January 2022 07:20 AM | அ+அ அ- |

பவானிசாகா் அணையின் நீா்தேக்கப் பகுதி.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீா் இருப்பு உள்ளதால் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரட்டைப்படை மதகு பாசனப் பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்து 3500 ஏக்கா் நிலங்களுக்கு நெல் பயிரிடுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. விநாடிக்கு 2,300 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் பாசனப் பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனா். இந்நிலையில், தற்போது தண்ணீா் திறப்பு தேதி கெடு முடிவடைந்ததைத் தொடா்ந்து பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 98.81 அடியாகவும், நீா் இருப்பு 27.82 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து 934 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 900 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...