ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை இயக்கப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு டவுன் வரை நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்குச் சென்றடையும்.
இதுபோல பாலக்காடு டவுனில் இருந்து பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7.10 மணிக்கு வந்தடையும்.
தினமும் இந்த பயணிகள் ரயிலில் 1,000க்கும் மேற்பட்டோா் பயணம் செய்து வந்தனா்.
குறிப்பாக ஈரோட்டில் இருந்து திருப்பூா், கோவைக்கு வேலைக்குச் செல்பவா்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக ஈரோடு-பாலக்காடு ரயில் நிறுத்தப்பட்டது.
தற்போது, கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், ஈரோடு- பாலக்காடு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதனை ஏற்று ஈரோடு-பாலக்காடு ரயில் சனிக்கிழமை முதல் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்தது.
அதன்படி ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் ரயில் சனிக்கிழமை காலை 7. 15 மணிக்குப் புறப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதையடுத்து, ஈரோட்டில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலில் பயணம் செய்த பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் இனிப்பு வழங்கினா்.