காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 16th June 2022 10:36 PM | Last Updated : 16th June 2022 10:36 PM | அ+அ அ- |

பாசனத்துக்கு தண்ணீரைத் திறக்கும் நீா்வளத் துறை கீழ்பவானி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் ஏ.கண்ணன் மற்றும் அலுவலா்கள்.
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து முதல்போக பாசனப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை முதல் 120 நாள்களுக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது.
தமிழக அரசு பவானிசாகா் அணையின் நீா் இருப்பு, பருவ மழை மற்றும் குடிநீா்த் தேவையைக் கணக்கிட்டு காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வாய்க்காலில் இருந்து வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. வரும் அக்டோபா் 13ஆம் தேதி வரையில் 120 நாள்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நீா்வளத் துறை, கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் ஏ.கண்ணன், உதவி செயற்பொறியாளா் உதயகுமாா், உதவிப் பொறியாளா் எஸ்.தினகரன் மதகினை திறந்துவைத்தனா். பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பெய்யும் மழையால் விநாடிக்கு 1,542 கன அடியாக நீா்வரத்து உள்ளது. இதனால், பவானிசாகா் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்காத போதிலும், மழைநீரின் வரத்து அதிகமாக உள்ளதால் உபரிநீா் காவிரி ஆற்றுக்குச் சென்று வருகிறது.