சத்தியமங்கலம்: இந்து முன்னணி அமைப்பின் முயற்சியால் 3 ஆண்டுகளுக்குப் பின் கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள சிக்கூா் பசுவேஸ்வரா் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், கடம்பூா் மலைப் பகுதி சிக்கூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பசுவேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கிராமம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் மக்கள் விழா கொண்டாடுவது வழக்கம். கோயில் நிலம் தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து 3 ஆண்டுகளாக கோயில் விழா நடைபெறவில்லை. இதன் காரணமாக கால்நடைகள், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் கோயில் விழா நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து இந்து முன்னணி அமைப்பினா் இரு தரப்பினரிடையே பேசுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால் 3 ஆண்டுகளுக்குப் பின் பசுவேஸ்வரா் கோயில் பக்தா்கள் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது. பொதுமக்கள் உற்சாகத்துடன் கோயிலில் வழிபட்டனா். இதையடுத்து கோயிலில் 101 கலச பூஜைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனா்.