ஈரோடு மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தின் கீழ் 4.30 கோடி பெண்கள் கடந்த ஓராண்டில் பயணம் செய்துள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், ஓராண்டில் அரசின் அரும்பணிகளின் அணிவகுப்பு என்ற தலைப்பில் ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலா் வெளியீட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி சாதனை மலரை வெளியிட்டு கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தின் கீழ் 4.30 கோடி மகளிா், 25 ஆயிரத்து 45 திருநங்கைகள், 2.33 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்துள்ளனா். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 9 லட்சத்து 83 ஆயிரம் போ்களுக்கு, 83 ஆயிரத்து 670 நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 21 ஆயிரத்து 176 பேருக்கு ரூ.58 கோடியே 20 லட்சம் செலவில் காப்பீட்டு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மற்றும் கோபி மின்பகிா்மான வட்டங்களில் ரூ.5 கோடியே 9 லட்சம் செலவில் 3,062 பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.