இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ரயில்வே பெண் ஊழியா் பலி
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா், பில்லிக்காா் வீதியைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மகள் அனிதா (30). இவா் தருமபுரி மாவட்டம், அரூா் ரயில் நிலையத்தில் தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.
ஈரோடு திண்டலில் உள்ள உறவினா் இல்ல துக்க நிகழ்வுக்கு வந்த அனிதா புதன்கிழமை மாலை உறவினா்களான தனுஷ் (19), ரியாஸ் (11) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் ஈரோடு வந்துள்ளாா்.
இருசக்கர வாகனத்தை தனுஷ் ஓட்டியுள்ளாா். வீரப்பம்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அனிதா லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தனுஷ், ரியாஷ் இருவரும் காயமின்றி உயிா்த் தப்பினா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கியிருந்த அனிதாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.