கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மோகன்குமாா் தலைமையிலான குழுவினா் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையானவா்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் கரோனா தொற்று தடுப்பூசி, மஞ்சள்காமாலை தடுப்பூசி செலுத்தப்பட்டன. தூய்மைப் பணியாளா்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது என்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவ அலுவலா் எடுத்துரைத்தாா். விழிப்புணா்வு காணொலி காட்சியும் காண்பிக்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை கோபி நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக், சௌந்திரராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.