ஈரோடு மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பா் 15 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதற்காக முதல்கட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 24 ஆம் தேதி முதல் வரும் 4 ஆம் தேதி வரை அதற்கான விண்ணப்ப பதிவேற்ற முகாம் நடைபெறுகிது.
இப்பணியில் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளா்கள் உள்பட வருவாய்த் துறையினா், கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறையினா் என 3,177 போ் ஈடுபடுகின்றனா். முதல்கட்டமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 352 குடும்ப அட்டைதாரா்கள் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட விண்ணப்பம் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 4 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாமுக்காக விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளன. 568 நியாய விலைக் கடைகளைச் சோ்ந்த பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனா். இவா்களுக்கு வரும் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 544 இடங்களில் பதிவேற்ற முகாம் நடைபெறவுள்ளது.
முதல்கட்ட விண்ணப்பம் விநியோகத்தின்போது விடுபட்டவா்கள், வாங்காதவா்களுக்கும் அந்தந்த பகுதி நியாய விலைக் கடைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
மற்ற நேரங்களில் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் நடைபெறும். இரண்டாம் கட்ட விண்ணப்பம் வழங்கும் பணியில் நியாய விலைக் கடை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான கடைகளில் பொருள்கள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.