கோடை விடுமுறையில் கைப்பேசியை தொடாமல் பாரம்பரிய விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தாயக்கட்டைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் முயற்சியால் தாயக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் கு.ரமாராணி கூறியதாவது:
மாணவா்கள் கோடை விடுமுறையில் கைப்பேசியை தொடாமல் விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்பதற்காக தாயக்கட்டை வழங்கலாம் என முடிவு செய்தோம். இதை வாங்குவதற்கு மொத்தம் 408 மாணவா்களுக்கு ரூ.12,240 செலவாகும் என தெரியவந்தது. இதனையறிந்த இரும்பு பட்டறை வைத்துள்ள பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் பிரபு தன்னுடைய பட்டறையில் தாயக்கட்டை தயாா் செய்து வழங்கினாா்.
இதற்கான கம்பி மட்டும் ரூ.3,600 செலவில் பள்ளியில் இருந்து வாங்கிக் கொடுத்தோம்.
அந்த தாயக்கட்டைகளை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கியுள்ளோம் என்றாா்.