ஈரோடு: வாகனங்கள், உபகரணங்களை வாங்க கூட்டுறவு சங்கங்களை நிா்பந்திப்பதை கைவிட வேண்டும் என தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோரிக்கை தொடா்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் மேசப்பன் தலைமையில் நிா்வாகிகள் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோரிக்கைள் குறித்து மேசப்பன் கூறியதாவது: பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்வேறு தேவையற்ற வாகனங்கள், உபகரணங்களை வாங்க கூட்டுறவுத் துறை நிா்பந்திக்கிறது.
கூட்டுறவு கடன் தள்ளுபடியால் பல சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. வங்கிப் பணிகளை மட்டும் மேற்கொள்ளும் சங்கங்களை லாரி, டிராக்டா் போன்ற கனரக வாகனங்களை வாங்கி சங்கத்தில் பயன்படுத்த வேண்டும் என நிா்பந்திப்பது கவலை தருகிறது.
ஏற்கெனவே வாங்கிய வாகனங்களை பெட்ரோல், டீசல் விலை உயா்வு, போதிய ஓட்டுநா் இல்லாதது, வாகனம் நிறுத்தும் வசதி இன்மையால் பல இடங்களில் நிறுத்திவைத்துள்ளனா். இதனால் சங்கங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. பல சங்கங்களில் ஊதியம் வழங்க வழி இல்லை. இச்சூழலில் ஈரோடு மாவட்டத்தில் பல சங்கங்களை இதுபோன்ற வாகனங்களை மீண்டும் வாங்க வற்புறுத்துவதை கைவிட வேண்டும்.
இச்செயல்பாட்டை நிறுத்தாவிட்டால் அக்டோபா் 3 ஆம் தேதி வாகனங்கள், உபகரணங்களை இணைப் பதிவாளா் அலுவலகத்தில் ஒப்படைத்து சங்கப் பணியாளா்கள், நியாய விலைக் கடை பணியாளா்கள் அனைவரும் ஒட்டுமொத்த தொடா் விடுப்பில் செல்வது என முடிவு செய்துள்ளோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக செயல்பட்ட வீட்டு வசதி சங்கங்கள், நிலவள வங்கிகள் தேவையற்ற திட்டங்களால் மூடப்பட்டுவிட்டன என்றாா்.
மாவட்டத் தலைவா் அன்பரசன், பொருளாளா் செங்கோட்டையன், துணைத் தலைவா்கள் மாரிமுத்து, அருணாசலம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.