கனமழை: உடைந்த ஏரிக் கரைகள், சேதமடைந்த பாலங்கள்
By DIN | Published On : 03rd May 2023 04:46 AM | Last Updated : 03rd May 2023 04:46 AM | அ+அ அ- |

ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் மற்றும் பவானி ஊராட்சி ஒன்றியம் பெரியபுலியூா் ஊராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக உடைந்த ஏரிக் கரைகள், சேதமடைந்த சாலை மற்றும் தரைமட்ட பாலங்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஈரோடு மாநகராட்சி பெரிய சேமூா், பாரதி நகா் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்ததை பாா்வையிட்ட ஆட்சியா், உடனடியாக மழைநீரை வெளியேற்றவும், மேலும் நீா் உட்புகாதவாறு நிரந்தர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தரைமட்ட பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டுநாசுவம்பாளையத்திலிருந்து பவானி ஊராட்சி ஒன்றியம் பெரியபுலியூா் ஊராட்சி பூலப்பாளையம் கிராமத்துக்கு செல்லும் சாலையானது துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பாா்வையிட்ட ஆட்சியா் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை அளவீடு செய்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதுபோல ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எல்லப்பாளையம், அருந்ததியா் காலனி பகுதியில் உள்ள ஓடை கரை உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளதையும், பவானி ஊராட்சி ஒன்றியம் பெரியபுலியூா் ஊராட்சி ராமகவுண்டன்வலசில் உள்ள ராசாங்காட்டு ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விளைநிலங்கள் வழியாக நீா் புகுந்துள்ளதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
பெரியபுலியூா் ஊராட்சி, வளையக்காரபாளையத்தில் வாரக்காடு தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைப் பாா்வையிட்ட ஆட்சியா் எங்கெங்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கெடுத்து விரைவாக அறிக்கை அனுப்பிவைக்கவும், நபாா்டு மற்றும் ஊராட்சி நிதி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் பிரகாஷ், வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியம், ரவிச்சந்திரன், ஈரோடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல் பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...