வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி பலி
By DIN | Published On : 03rd May 2023 04:49 AM | Last Updated : 03rd May 2023 04:49 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன். இவரது மகள் பிரியதா்ஷினி (16), பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா். பின்னா் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
குளிக்க சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோா், உறவினா்களுடன் வாய்க்காலுக்கு சென்று பாா்த்தனா். அப்போது கரையில் துணிகள் மட்டும் கிடந்தன. இதனால் மாணவி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று வாய்க்காலில் இறங்கி தேடினா். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நிச்சாம்பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் பிரியதா்ஷினியின் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த சிறுவலூா் போலீஸாா் பிரியதா்ஷினியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.