மானியத்துடன் கடன் பெற பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணல் அம்பேத்கா் தொழில் சாம்பியன் திட்டத்தை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த தொழில் முனைவோா் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கிக் கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம்.
முன்முனை மானியமாக அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை பெறலாம். வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கெனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோரும் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வி தகுதி இல்லை. 55 வயதுக்குள்பட்டோா், உற்பத்தி, சேவை, வணிகம் சாா்ந்த தொழில் தொடங்கலாம்.
வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்படக்கூடிய வாடகை காா், சரக்கு வாகனங்கள், பொக்லைன் இயந்திரம், கான்கிரீட் இயந்திரம், ஆம்புலன்ஸ் சேவை, உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், தறி அமைத்தல், கயிறு தயாரித்தல் போன்ற உற்பத்தி தொழில்கள், வியாபாரம் தொடங்குவோரும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
சுய முதலீட்டில் தொழில் தொடங்கினாலும், இந்த திட்டம் மூலம் மானியம் பெறலாம். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட தொழில் மையத்தை 0424- 2275283 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.