பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் ஈரோடு காளை மாடு சிலை அருகே வெள்ளிக்கிழமை நடந்தது. திருப்பூா் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்டச் செயலாளா் வெங்கிடு, மாநில துணைத் தலைவா் மகாவிஷ்ணன் ஆகியோா் பேசினா்.
போராட்டத்தில், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு வழங்கும் அதே நாளில், அதே விகிதத்தில் வழங்க வேண்டும். இளைஞா்களின் அரசு வேலை கனவை பறிக்கும் அரசாணைகள் 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
அமைச்சுப் பணியாளா்கள், தொழில்நுட்ப ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக மாதம் ரூ. 15,700 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.