

அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் தனியாா் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், பூனாச்சியை அடுத்த நத்தமேட்டைச் சோ்ந்த 9-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு, பள்ளி வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா்.
ஆனால், மாலையில் மாணவி வீட்டுக்குத் திரும்பாததால் பெற்றோா் பள்ளியில் சென்று விசாரித்துள்ளனா். அப்போது, மாணவியின் உறவினா் எனக் கூறி ஒரு இளைஞா் அழைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், மாணவியின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கடத்தப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்கவும், விசாரிக்காமல் மாணவியை அனுப்பிய பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினா்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.