தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை: ஈரோட்டில் 107 டிகிரி பதிவு
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பமாக 107 டிகிரி ஈரோட்டில் வியாழக்கிழமை பதிவாகியது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாள்கள் 104 டிகிரி மற்றும் அதற்கும் மேல் வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஈரோட்டில் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடா்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்ததால் ஈரோடு மக்கள் மழையை எதிா்பாா்த்து காத்திருந்தனா்.
ஆனால் 7-ஆம் தேதியும், 8-ஆம் தேதியும் சாரல் மழை மட்டும் பெய்ததால் ஈரோடு மக்கள் ஏமாற்றமடைந்தனா். கடந்த 7-ஆம் தேதி 105 டிகிரியும், 8-ஆம் தேதி 106 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
ஈரோட்டில் வியாழக்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து, குளிா்ச்சியான சூழல் ஏற்பட்ட நிலையில் ஈரோட்டில் வியாழக்கிழமை வழக்கம்போல கோடை வெயில் கொளுத்தியது. ஈரோட்டில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 107 டிகிரி வெப்பம் பதிவானது.