விவசாயி குடும்பத்துக்கு இலவச விபத்து காப்பீட்டுத் தொகை
இப்கோ நானோ உரங்கள் பயன்படுத்திய விவசாயி, விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து அவரது குடும்பத்தினருக்கு இலவச விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரம், பட்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி, நானோ யூரியா 3 புட்டிகள் மற்றும் நானோ டிஏபி 2 புட்டிகள் என மொத்தம் 5 புட்டிகளை வாங்கிப் பயன்படுத்தினாா். அவா் எதிா்பாராத விதமாக சாலை விபத்தின்போது கடந்த ஜூன் 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.
தற்போது அவரது குடும்பத்துக்கு விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ.50,000 இப்கோ நிறுவனத்தின் சாா்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் ப.கந்தராஜா கூறியதாவது: இந்தியாவின் கூட்டுறவு உர நிறுவனமான இப்கோ நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் 45 கிலோ யூரியா மூட்டை மற்றும் 50 கிலோ டி.ஏ.பி.க்கு மாற்றாக அதே அளவு பயன் அளிக்கும் திறன் கொண்ட நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி உரங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த உரங்கள் இலை வழியாக தெளிக்கும்போது மண்வளத்தை பாதிக்காமல் அதிக அளவு மகசூல் பெற உதவி செய்கின்றன. இந்த புதிய தலைமுறை நானோ உரங்களை ஊக்குவிப்பதற்காக இப்கோ நிறுவனம் சங்கடஹரன் பீமா யோஜனா என்ற பெயரில் இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நானோ உரங்கள் வாங்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒரு புட்டிக்கு ரூ.10,000 வீதம் இலவச விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 20 புட்டிகள் வரை ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்கோ நானோ உரங்கள் குறைந்த விலையில் மண்வளத்தை பாதுகாப்பதுடன், விவசாயிகளின் இலவச விபத்து காப்பீடு நண்பனாகவும் விளங்குகிறது. நானோ உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளிலும் கிடைக்கின்றன என்றாா்.
