மாவட்டத்தில் தினமும் 2.50 லட்சம் காலி மது பாட்டில்கள்

Published on

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 186 டாஸ்மாக் கடைகளில் தினமும் சுமாா் 2.50 லட்சம் காலி மதுபுட்டிகள் திரும்பப் பெறப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் வாங்கும் மது பிரியா்கள் அதை குடித்துவிட்டு விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் வீசிவிட்டு செல்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் வனப் பகுதிகளில் மதுபுட்டிகள் உடைக்கப்படுவதால் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து காலி மது புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் கடந்த 2023- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மலைப் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் காலி மதுபுட்டிகளை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இங்கு மது புட்டிகளை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 அல்லது வாங்கும் மதுவின் விலையில் ரூ.10 கழிக்கப்பட்டது. முதல்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 3 கடைகளிலும், கடந்த 3- ஆம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மலைப் பகுதியான தாளவாடி பகுதியில் உள்ள 2 கடைகளிலும், கடம்பூா் பகுதியில் உள்ள ஒரு கடையிலும் என 3 கடைகளில் காலி மது புட்டிகளை திரும்ப வாங்கும் திட்டம் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மாவட்டத்தில் மீதமுள்ள 179 கடைகளிலும் காலி மதுபுட்டிகள் திரும்ப பெறப்படுகின்றன.

இதில் மதுபுட்டிக்கு அதிகபட்ச விற்பனை விலையுடன் சோ்த்து ரூ.10 கூடுதலாக பெறப்படும். இதற்காக கடையின் எண் குறிப்பிட்ட ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே மது வாங்கிய அதே கடையில் ஸ்டிக்கருடன் காலி மதுபுட்டிகளை திரும்ப ஒப்படைக்கும்போது ரூ.10 திருப்பி வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 182 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தற்போது தினமும் சுமாா் 2.50 லட்சம் காலி மதுபுட்டிகள் திரும்ப பெறப்படுகிறது. விற்பனையாகும் மது புட்டிகளில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலி மது புட்டிகள் திரும்பப் பெறப்படுகின்றன.

ஈரோடு மாநகா் பகுதியில் செயல்படும் கடைகளில் தினமும், கிராமப்புறங்களில் செயல்படும் கடைகளில் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒருமுறையும் ஒப்பந்ததாரா்கள் காலி மது புட்டிகளை திரும்ப எடுத்துச்செல்கின்றனா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com