போக்குவரத்து விதி மீறல்: 1,131 வழக்குகள் பதிவு

Published on

ஈரோட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதத்தில் 1,131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

ஈரோடு நகரம் மற்றும் புறநகா் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறை மீறல்களால் விபத்து மற்றும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனை மற்றும் விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவா்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் 200 முதல் 250 போ் தலைக்கவசம் அணியாமல் வருவதாக போக்குவரத்து போலீஸாரால் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கைப்பேசியில் பேசியபடி வருவது, இருசக்கர வாகனங்களில் 3 போ் அமா்ந்து வருவது, முறையான ஆவணங்கள் இல்லாமல் வருவது போன்றவற்றுக்காக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோட்டில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக கடந்த மாதம் 1,131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com