112 புதிய வடிவமைப்புகள் மூலம் 3,852 கைத்தறி ரகங்கள் உற்பத்தி: ஆட்சியா்
படுக்கை விரிப்பு, ஜமக்காளம் மற்றும் கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்டவற்றில் புதிதாக 112 வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டு 3,852 கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
ஈரோட்டில் உற்பத்தியாகும் கைத்தறி ரகங்களில் புது வடிவமைப்புகளைப் புகுத்தி அவற்றை பன்முகப்படுத்தி ஏற்றுமதி செய்யக்கூடிய ரகங்களாக மாற்றுதல் தொடா்பாக கருத்தரங்கம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 100 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களும் அதில் 50,000 நெசவாளா்களும் நெசவுத் தொழில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனா். தொழில் செய்பவா்களையும் சோ்த்து சுமாா் ஒரு லட்சம் போ் ஈரோடு மாவட்டத்தில் மட்டும்
நேரடியாகவும் மறைமுகமாகவும் கைத்தறி நெசவுத் தொழிலால் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, தாண்டாம்பாளையம், சிவகிரி, கவுந்தபாடி, பவானி, அந்தியூா், கோபி, சத்தியமங்ககம், டி.ஜி.புதூா், தொட்டம்பாளையம் பகுதிகளில் நெசவாளா்கள் அதிகம் உள்ளனா். இங்கு தயாரிக்கப்படும் சென்னிமலை படுக்கை விரிப்பு, பவானி ஜமக்காளம் ஆகியவை உலக பிரசித்திபெற்றது. அதுமட்டுமல்லாமல் மென்பட்டு சேலைகள் கோரா காட்டன் சேலைகள், கால்மிதிகள், யோகா விரிப்புகள், துண்டுகள், டஸ்டா் ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சென்னிமலை பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் சமையலறை உடை, கையுறை, சமையலறைக்கு பயன்படுத்தப்படும் துண்டு, நாற்காலிக்கு போடப்படும் துண்டு ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாா் செய்து கோ- ஆப்டெக்ஸ் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், சென்னிமலையில் உள்ள சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கமானது ஏமன் நாட்டில் உபயோகப்படுத்தப்படும் பிரத்யேக துணி ரகங்களை தயாா் செய்து முகவா்கள் மூலம் ஏமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது.
தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஒரு குழுவானது ஈரோட்டில் உள்ள கைத்தறி நெவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு நேரில் வந்து கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ரகங்களில் எவ்வாறு புதிய வடிவமைப்புகளை புகுத்தலாம் என ஆய்வு செய்து படுக்கை விரிப்பு, ஜமக்காளம் மற்றும் கோரா காட்டன் சேலைகள் ஆகிய கைத்தறி ரகங்களில் புதிதாக 112 வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய வடிவமைப்புகளில் 3,852 எண்ணிக்கையிலான கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்து கோ-ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
கைத்தறி ரகங்களில் மதிப்பு கூட்டுதல், புதிய வடிவமைப்பினை உருவாக்குதல் மற்றும் புதிய வடிவமைப்பினைக் கொண்டு சந்தைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் கைத்தறி துறையானது கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு குழுவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்றாா்.
லண்டனில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஜமக்காளத்ததை கொண்டு ஆடை அணிகலங்கள், கைப்பைகளை அறிமுகப்படுத்திய பவானி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டாா்.
இக்கருத்தரங்கில் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி குழுமம் நிா்வாக இயக்குநா் ஸ்ரீதா், துணைத் தலைவா் ரமேஷ், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் (சேலம்) தென்னரசு, உதவி இயக்குநா் (கைத்தறித் துறை) சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

