பிரிந்த மனைவியை சோ்த்து வைக்காததால் காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவியை, சோ்த்து வைக்காததால் காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை ஆப்பக்கூடல் போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கைப்பேசி மூலம் வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்ட மா்ம நபா், ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும், இரவு வெடித்துச் சிதறும் எனவும் கூறி தொடா்பைத் துண்டித்துள்ளாா். இது குறித்து, ஆப்பக்கூடல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதில், மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீஸாா், கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்ததில், நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்த குணசேகரன் (77), கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்ததும், பள்ளிபாளையத்தில் பதுங்கி இருப்பதையும் கண்டறிந்தனா்.
இதையடுத்து, குணசேகரனைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உதகையில் இருந்து ஆப்பக்கூடலுக்கு வந்த குணசேகரனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துள்ளாா். கடந்த ஆண்டு அப்பெண், குணசேகரனைப் பிரிந்து சென்றுவிட்டாா். தனது மனைவியை சோ்த்து வைக்கக் கோரி ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்போது, கணவருடன் சோ்ந்து வாழ விரும்பவில்லை என அப்பெண் கூறியதால், கட்டாயப்படுத்தி சோ்த்து வைக்க முடியாது என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதனால், ஆத்திரத்தில் இருந்த குணசேகரன், மதுபோதையில் கைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குணசேகரன் இருந்ததால், எச்சரிக்கை செய்து போலீஸாா் விடுவித்தனா்.
