அந்தியூா் பேரூராட்சியில் ரூ.23.97 கோடியில் குடிநீா் விரிவாக்கப் பணிகள்
அந்தியூா் பேரூராட்சியில் ரூ.23.97 கோடியில் செயல்படுத்தப்பட்ட குடிநீா் விரிவாக்கத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.23.97 கோடியில் அம்ரூத் 2.0 திட்டம் தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் புதிதாக 3 மேல்நிலை நீா்தேக்கக் தொட்டிகள், பிரதான மற்றும் பகிா்மானக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, பழனியப்பா வீதியில் மேல்தேக்கத் தொட்டி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளா் கணேசன், பேரூராட்சி துணைத் தலைவா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் சு.சதாசிவம் வரவேற்றாா்.
இதில், சுகாதார அலுவலா் சகாய புவனேஸ்வரி, திமுக பொதுக்குழு உறுப்பினா் மாதேஸ்வரன், அந்தியூா் பேரூா் செயலாளா் காளிதாஸ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

