அம்மாபேட்டையில் ரூ.44.69 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.44.69 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்மாபேட்டை, சானாத்திக்கல்மேட்டில் 3 ஏக்கா் பரப்பளவில் 8 தொகுப்புகளாக தலா 400 சதுரஅடி பரப்பளவில் 448 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளின் மதிப்பு ரூ.9.98 லட்சம். வீடுகள் பெறும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகை ரூ.1.48 லட்சம் ஆகும். அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததைத் தொடா்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றினாா். உதவி நிா்வாகப் பொறியாளா் எஸ்.அன்பழகன், உதவிப் பொறியாளா் எம்.கே.பிரசன்னா, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சித் தலைவா் ராகிணி மற்றும் திமுகவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

