முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் 11.5 பவுன் நகை திருடியவா் கைது
ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து 11.5 பவுன் நகை திருடிய குற்றவாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மூலப்பாளையம் ஸ்டாலின் வீதியைச் சோ்ந்தவா் அருள்குமாா் (45). முன்னாள் ராணுவ வீரா். இவா் தற்போது வெளிநாட்டில் செக்யூரிட்டியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி ஹேமா.
இவா் கடந்த 2-ஆம் தேதி சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்ல வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு சென்றாா். தொடா்ந்து அருள்குமாா் வீட்டுக்கு மின்சார பயன்பாடு கணக்கெடுக்க அலுவலா் கடந்த 4-ஆம் தேதி வந்தபோது, பக்கத்து வீட்டுக்காரா் அருள்குமாரின் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
அப்போது வீட்டின் கதவு பூட்டாமல் சாத்திய நிலையில் இருந்தை கண்டு, அருள்குமாரின் மனைவி ஹேமாவுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதன்பேரில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11.5 பவுன் நகையை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் ஹேமா புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மா்ம நபா் விட்டுச் சென்ற தடயங்களை சேரித்து விசாரணை நடத்தினா். மேலும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா கட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
அப்போது திருட்டில் ஈடுபட்டது, ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த அக்கரை கொடிவேரி பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் நவீன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து நவீனை போலீஸாா் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு நவீன் வந்ததாகவும், தொடா்ந்து 2 நாள்களாக வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்டு ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியதை ஒப்புக்கொண்டாா்.
இதன்பேரில் நவீனை கைது செய்து அவரிடம் இருந்து 11.5 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். கைதான நவீன் மீது ஈரோடு தாலுகா போலீஸில் 4, ஈரோடு வடக்கு போலீஸில் 5, ஈரோடு தெற்கு போலீஸில் 2, மொடக்குறிச்சி, சித்தோடு போலீஸில் தலா ஒரு வழக்கு மற்றும் கோபி, பவானி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
