தெரு நாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழப்பு
பெருந்துறை: சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில், 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளன.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டை அடுத்த ஞானிபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவா் விவசாயம் செய்து வருகிறாா். இவருடைய 40 ஆடுகளை வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சல் முடிந்த பிறகு கொட்டகைக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கொட்டகைக்குள் தெரு நாய்கள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளன. மறுநாள் காலையில் ஆட்டு கொட்டகைக்கு சென்ற பழனிச்சாமி, ஆடுகள் உயிரிழந்துகிடப்பதைக் கண்டு வேதனை அடைந்தாா். தெருநாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழந்துள்ளன. 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றன.
இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் வெள்ளோடு காவல் நிலைய போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா், கால்நடை மருத்துவா் ஆகியோா் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவும், தெரு நாய்களை பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.
