ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் முன் புதன்கிழமை நள்ளிரவில் திரண்டு வண்ண பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்ற மக்கள்.
ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் முன் புதன்கிழமை நள்ளிரவில் திரண்டு வண்ண பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்ற மக்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு: ஈரோடு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஈரோட்டில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

ஈரோட்டில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு புதன்கிழமை நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாநகரில் பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் முன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, ஆங்கிலப் புத்தாண்டு 2026 பிறப்பையொட்டி நள்ளிரவு 12.01 மணிக்கு வண்ண பலூன்களை பறக்க விட்டும், ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினா்.

தொடா்ந்து ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் புத்தாண்டு பிறப்பையொட்டி வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், கஸ்தூரி அரங்கநாதா் கோயில், மகிமாலீஸ்வரா், காவிரிக்கரை சோழீஸ்வரா் கோயில், வஉசி பூங்காவில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், ஈரோடு பெரியமாரியம்மன் மற்றும் வகையறா கோயில்கள், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே மக்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டனா். இதேபோல ஈரோடு ரயில்வே காலனி மற்றும் கருங்கல்பாளையத்தில் சாய்பாபா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயம், புனித அமல அன்னை ஆலயம், ரயில்வே காலனியில் உள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com