பாரத் நெட் திட்டத்தில் தடையில்லா இணைய சேவை வழங்க தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்டத்தில் பாரத் நெட் திட்டத்தில் தடையில்லா இணைய சேவை வழங்க தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களை (டிஎல்எப்பி) தோ்வு செய்யும் பணிகளை தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பாரத் நெட் பணிகள் சுமாா் 95 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரா் அனுமதிக்கப்படுவாா். அந்த மாவட்டங்கள், நிறுவனம், நிறுவனத்தின் வணிக செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ள மாவட்டம் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளா்களின் முக்கியப் பொறுப்புகளில் ஆப்டிக்கல் பைபா் கேபிள் (ஓஎப்சி), அப்டிக்கல் நெட்வோா்க் டொ்மினல் (ஓஎன்டி) பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், ஓஎப்சி பராமரிப்புப் பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரி செய்தல், விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்பு தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் வரும் 14-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் விரும்பும் துணைப் பிரிவை தோ்வு செய்து, ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ரூ.25 ஆயிரம் (திரும்பப்பெறக்கூடிய வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்படும் பங்கீட்டாளா்கள், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தியதும், தலைமையகத்தால் பணி உத்தரவு வழங்கப்படும். ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
