பெரியாா் நகா் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மொடக்குறிச்சி தீயணைப்பு வீரா்கள்.
பெரியாா் நகா் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மொடக்குறிச்சி தீயணைப்பு வீரா்கள்.

மொடக்குறிச்சி அருகே குப்பைக் கிடங்கில் தீ

மொடக்குறிச்சி அருகே காட்டுப் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்குக்கு வைக்கப்பட்ட தீயை, தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து அணைத்தனா்.
Published on

மொடக்குறிச்சி அருகே காட்டுப் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்குக்கு வைக்கப்பட்ட தீயை, தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து அணைத்தனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே 46 புதூா் பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதியில் தினமும் சேகரமாகும் குப்பையை வாகனத்தில் ஏற்றி வந்து, பெரியாா் நகா் குப்பைக் கிடங்கு பகுதியில் கொட்டி வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை மாலை குப்பைக் கிடங்குக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மா்ம நபா்கள் தீ வைத்துள்ளனா். இதனால் தீ பரவி குப்பைக் கிடங்கு இருக்கும் பகுதி நோக்கி வந்தது. மேலும், அருகே உள்ள பெரியாா் நகா் குடியிருப்புப் பகுதிக்கும் தீ பரவியது.

இதைப் பாா்த்து பெரியாா் நகா் மக்கள் அளித்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் லெமா் தம்பையா தலைமையிலான தீயணைப்புத் துறை வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். குப்பைக் கிடங்கில் பிடித்த தீயை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தினா்.

தீப்பிடித்த காட்டில் குப்பை, காய்ந்த சருகுகள், காய்ந்த இலைகள் இருந்ததால் அரை ஏக்கா் பரப்பளவுக்கு தீக்கிரையானது. இதனால் அப்பகுதி அடா்ந்த புகைமூட்டமாக காணப்பட்டது.

இதேபோல, லக்காபுரம் அருகே உள்ள போக்குவரத்து நகா் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினா் சென்று அருகில் உள்ள மரங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனா். இதனால் அப்பகுதியில் தீ விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

அடுத்தடுத்து இரண்டு தீ விபத்துகளால் லக்காபுரம் மற்றும் 46 புதூா், முத்து கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பரபரப்பு நிலவியது.

X
Dinamani
www.dinamani.com