உதகையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு பூட்டப்பட்டுள்ள எச்பிஎஃப் தொழிற்சாலை வளாகத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ரஜினிகாந்த் மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஜினிகாந்த் மக்கள் மன்றத்துக்கு நீலகிரி மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் உதகையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்திய பின்னர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரஜினிகாந்த் மக்கள் மன்றத்துக்கென நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாத இறுதிக்குள் 2 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இம்மன்றத்தில் பெண்கள், இளைஞர்களைஅதிக அளவில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளதால், அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் மக்கள் மன்றத்துக்கு பழங்குடியினரின் ஆதரவும் அதிக அளவில் உள்ளதால், அவர்களையும் அமைப்பில் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
பேட்டியின்போது மாவட்ட இணைச் செயலாளர் துரைராஜ், துணைச் செயலாளர்கள் சுந்தர், சுலைமான், உதகை நகரச் செயலாளர் எஸ்.ரங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரின்ஸ் டானியல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மலைப்பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிகளுக்குச் செல்லும் வகையிலான மூன்றாவது மாற்றுப்பாதை வழித்தடத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ள எச்பிஎஃப் தொழிற்சாலை வளாகத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதகை நகரில் ஏற்படும் வாகன நெரிசலை சமாளிக்கவும், போக்குவரத்தை சீர் செய்யவும் உதகை குதிரைப் பந்தய மைதானத்தில் நிரந்தரமாக வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் ஆகிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.