குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழ சீசன் துவக்கம்
By DIN | Published On : 15th July 2019 09:59 AM | Last Updated : 15th July 2019 09:59 AM | அ+அ அ- |

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் பேரிக்காய், ஆரஞ்சு, பீச், பிளம்ஸ், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் 109 பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. இம்மரங்களில் தற்போது பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்குகின்றன. பொதுவாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் சீசன் இருக்கும்.
ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இப்பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. தக்காளி போன்ற தோற்றத்தைக் கொண்ட இப்பழத்தில் வைட்டமின் ஏ, பி சத்துகள் நிறைந்துள்ளன. இப்பழங்கள் மற்ற பழங்களைப் போன்று மரத்திலேயே பழுப்பதில்லை.
மாறாக காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை எத்தனால் என்ற திரவத்தில் ஊறவைத்தால் இரண்டு நாள்கள் கழித்துதான் பழுக்கும். தென் இந்திய அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைப் பண்ணையில் மட்டும்தான் இப்பழ மரங்கள் உள்ளன.
இப்பழங்கள் கிலோ ரூ. 150 வரை விற்கப்படுகின்றன. இதன் நாற்றுகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. பெர்சிமன் பழ சீசன் துவங்கியுள்ளது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.