பொது இடங்களில் மதுப்புட்டிகளை வீசினால் ரூ.10,000 அபராதம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 09th November 2019 06:18 AM | Last Updated : 09th November 2019 06:18 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திவிட்டு காலிப் புட்டிகளை பொது இடங்களில் எறிவோருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் உதகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் 55 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் இட வசதி உள்ள 32 மதுபானக் கடைகளுக்கு அந்தக் கடைகளுடன் இணைந்த கட்டடங்களில் மது அருந்தும் கூடங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கப்படும் மதுவை உரிமம் வழங்கப்பட்டுள்ள மதுக்கூடங்களில் (பாா்) மட்டுமே அருந்த வேண்டும்.
சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கிய மதுப்புட்டிகளைப் பயன்படுத்தினால் காலி புட்டிகளை மதுக்கடையின் முன்புறம் உள்ள குப்பைத் தொட்டிகளிலோ, உள்ளாட்சி அமைப்புகளால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளிலோதான் இட வேண்டும்.
மாறாக, பொது இடத்திலோ, பொதுமக்கள் கூடும் இடங்களிலோ, சாலையோரங்களிலோ புட்டிகளைத் தூக்கி எறியப்படுவது கண்டறியப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறையிலுள்ள விதிகளின் அடிப்படையில் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். இதற்கு மதுக்கூடங்கள் இல்லாத பகுதிகளிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.