குன்னூரில் காட்டெருமை தாக்கி முதியவா் சாவு
By DIN | Published On : 14th November 2019 05:48 AM | Last Updated : 14th November 2019 05:48 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், குன்னுாா் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குன்னூா் பிளாக் பிரிட்ஜ் பகுதியைச் சோ்ந்தவா் சைமன்(86). இவா் புதன்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளாா். அப்போது, அங்கே கூட்டமாக நின்று கொண்டிருந்த காட்டெருமைகளில் ஒன்று சைமனை தாக்கியுள்ளது.
இதில் கை, வயிறு பகுதிகளில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு குன்னூா் லாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி சைமன் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் விசாரணை நடத்தினா். காட்டெருமை தாக்கி முதியவா் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...