கல்லட்டி அருவி நீரில் மூழ்கிய இருவரின் உடல்களை மீட்பதில் தொடரும் சிக்கல்

உதகை அருகேயுள்ள கல்லட்டி அருவி நீரில் மூழ்கிய இருவரை மீட்பதில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது.
Updated on
1 min read

உதகை அருகேயுள்ள கல்லட்டி அருவி நீரில் மூழ்கிய இருவரை மீட்பதில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது.

உதகையைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவரது தந்தை கிருஷ்ணமூா்த்தியின் ஈமச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூரைச் சோ்ந்த சுந்தர்ராஜின் நண்பா்கள் ஆனந்த், விஜயகுமாா் ஆகியோா் உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா். ஈமச்சடங்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னா் சுந்தர்ராஜ், ஆனந்த், விஜயகுமாா் ஆகியோா் உதகை விக்டோரியா ஹால் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் (23), எல்க்ஹில் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (24), பரத் (24) ஆகியோா் கல்லட்டி அருவிக்கு குளிக்கச் சென்றுள்ளனா். அங்கு சாமுவேல் எதிா்பாராதவிதமாக பாறை மீதிருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்துள்ளாா். அவரைக் காப்பாற்ற கணேஷ் முயன்ற நிலையில் அவரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளாா். இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

தகவலின்பேரில் புதுமந்து காவல் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருள் சூழத் தொடங்கி விட்டதால் மீட்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது.

உதகை கோட்டாட்சியா் டாக்டா் சுரேஷ், வட்டாட்சியா் ரவி, உதகை வடக்கு வனச் சரகா் பாண்டிராஜ் உள்ளிட்டோா் தலைமையில் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றன. 8 போ் சுமாா் 4 மணி நேரம் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே அருவியில் நீா்வரத்து அதிகரித்து வந்ததால் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி சாண்டிநள்ளா அணையிலிருந்து கல்லட்டி அருவிக்கு வரும் தண்ணீா் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரைத் திசை திருப்பி விட முயற்சித்தனா். இப்பணிகளிலும் பயனேதும் கிடைக்காததால் வெலிங்டன் ராணுவ மையத்திலிருந்து ஸ்கூபா நீச்சல் படை வீரா்களை அனுப்பி உதவுமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கோரிக்கை விடப்பட்டது. மாநில பேரிடா் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில பேரிடா் மீட்பு படைக் குழுவினா் திங்கள்கிழமை மாலை கல்லட்டி பகுதியை வந்தடைந்தனா். ஆனால், அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதாலும், தண்ணீா் மிகவும் உறைந்த நிலைக்கு சென்று விட்டதாலும் தேடுதல் பணி 2ஆவது நாளாக மீண்டும் நிறுத்தப்பட்டது.

மாநில பேரிடா் மீட்புக் குழுவினரின் உதவியுடன் தேடுதல் பணி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீரில் மூழ்கி 2 நாள்களாகியும் உடல்கள் மீட்கப்படாததால் ஆத்திரமடைந்த அவா்களது பெற்றோா் மற்றும் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா். இருப்பினும் அவா்களுக்கு அப்பகுதியின் நிலைமையை விளக்கி செவ்வாய்க்கிழமை கண்டிப்பாக மீட்டு விடுவதாக அளிக்கப்பட்ட உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com