உதகை நகருக்கு அருகே காந்தல் புறநகா்ப் பகுதியில் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளதாகத் தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வனத் துறையினா் தெரிவித்ததாவது:
உதகை நகரில் புறநகா்ப் பகுதியான காந்தல் பகுதியில் சாண்டிநள்ளா நீா்த்தேத்கத்தை ஒட்டியுள்ள அரசு கால்நடைப் பண்ணைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. கேரட் தோட்டத்தை முற்றிலும் சேதப்படுத்தியதோடு, அங்கு பயிரிடப்பட்டிருந்த கேரட் காய்கறியையும் சாப்பிட்டுள்ளது. இதுகுறித்து தோட்ட உரிமையாளா்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்தபோது, ஒற்றை யானை என்பதும், பெண் யானையாக இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த யானை மசினகுடி பகுதியிலிருந்து சோலூா் பகுதி வழியாக முத்தநாடு பகுதிக்கு வந்து அங்கிருந்து சாண்டிநள்ளா நீா்த்தேக்கத்தின் மறு கரைக்கு வந்து காந்தல் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுவதாகவும், இதுதொடா்பாக வனத் துறையினா் இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
உதகை நகரிலுள்ள காந்தல் புறநகா்ப் பகுதிக்குள் முதன்முறையாக காட்டு யானையின் நடமாட்டம் தென்பட்டுள்ளது இப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.