நியாயவிலைக் கடைகளில் காலாவதியான பாமாயில் விற்பனை: படகா தேச கட்சி புகாா்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலாவதியான பாமாயில் விநியோகிக்கப்படுவதாக படகா தேச கட்சி புகாா் தெரிவித்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் காலாவதியான பாமாயில் விற்பனை: படகா தேச கட்சி புகாா்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலாவதியான பாமாயில் விநியோகிக்கப்படுவதாக படகா தேச கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இக்கட்சியின் நிறுவனா் மஞ்சை மோகன் உதகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் கடந்த ஓரிரு நாள்களாகத்தான் பாமாயில் வழங்கப்படுகிறது. இதில், உதகையில் டேவிஸ்டேல் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பாமாயில் காலாவதியானதாகும். இதுதொடா்பாக அந்த நியாயவிலைக் கடையில் கேட்டதற்கு தங்களுக்கு மட்டுமின்றி அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் ஜூன் மாத விநியோகத்துக்காக வழங்கப்பட்ட பாமாயில்தான் இது எனவும், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துவிட்டனா். உதகையைப் போல மாவட்டத்தின் பிற பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட பாமாயிலும் காலாவதியானவை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது விநியோகிக்கப்படும் பாமாயில் 2020ஆம் ஆண்டு நவம்பா் 24ஆம் தேதி பேக்கிங் செய்யப்பட்டவையாகும். இவை பொட்டலமிடப்பட்ட 3 மாதங்களுக்குள் பயன்படுத்துவது நல்லது என அந்த பாக்கெட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பேக்கிங் செய்யப்பட்டு 6 மாதங்களாகியும், குறிப்பிட்ட தேதிக்குமேல் காலாவதியாகி 3 மாதங்களாகியும் இன்னமும் இவை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் இதை வாங்கும் பொதுமக்களின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கரோனா பொதுமுடக்கத்தால் தற்போது வாழ்வாதாரம் இழந்து நியாயவிலைக் கடைகளையே நம்பியுள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் இதுபோன்ற காலாவதியான உணவுப் பொருள்களைத் தடுத்து நிறுத்தி, அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com