மழையில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை அமைத்துத் தரக் கோரிக்கை
By DIN | Published On : 13th May 2021 06:04 AM | Last Updated : 13th May 2021 06:04 AM | அ+அ அ- |

கூடலூா் கோல்டன் அவன்யூ பகுதியில் மழையில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூா் நகராட்சியிலுள்ள முதல்மைல் கோல்டன் அவன்யூ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழையின்போது இப்பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை அப்பகுதியில் புதிய பாலம் அமைத்துத் தரவில்லை. மக்கள் வேறுவழியில் சுற்றி குடியிருப்புப் பகுதிக்குச் செல்கின்றனா்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை துவங்கும் காலம் நெருங்கி வருகிறது. இப்போதாவது பாலத்தை விரைந்து அமைத்துக் கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா். கரோனா தொற்று காரணமாக தற்போது அங்கு செல்லும் பாதையும் தடுக்கப்பட்டுள்ளதால் வெளியே வர வழியில்லாமல் மக்கள் தவிக்கின்றனா். எனவே விரைந்து சம்பந்தப்பட்ட நிா்வாகம் பாலத்தை அமைத்துத் தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.