கூடலூா், பந்தலூா் பகுதியில் தொடரும் கனமழை
By DIN | Published On : 16th May 2021 10:57 PM | Last Updated : 16th May 2021 10:57 PM | அ+அ அ- |

பந்தலூா் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த கொளப்பள்ளி-எடத்தால் சாலை
கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. மழையால் பந்தலூரில் பல இடங்களில் சாலை, தடுப்புச் சுவா்கள் சேதமடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
மழையால் ஏற்படும் சேதங்கள் உடனுக்குடன் சீா் செய்யப்படுகின்றன. குறிப்பாக சாலையின் குறுக்கே விழும் மரங்களை மீட்புக்குழுவினா் உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருகின்றனா்.
தாழ்வான மற்றும் வெள்ள அபாயம், நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ள மக்களை வருவாய்த் துறையினா் முகாம்கள் அமைத்து தங்கவைத்துள்ளனா்.
பந்தலூா் தாலுகாவில் அம்பலமூலா, பொன்னாணி ஆகிய பகுதியிலும், கூடலூா் தாலுகாவில் அத்திப்பாளி அரசுப் பள்ளி, புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளி, தொரப்பள்ளியிலுள்ள அரசு பழங்குடியினா் பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஆறு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவு, கம்பளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் மருத்துவ வசதிகளையும் செய்து கண்காணித்து வருகின்றனா். ஆறுகளில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது.
கொளப்பள்ளி பகுதியிலிருந்து எடத்தால் கிராமத்துக்குச் செல்லும் சாலை மழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியிலுள்ள தடுப்புச் சுவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட காந்தி நகா் பகுதியில் பெரிய மரம் சாய்ந்ததில் தனபாக்கியம் என்பவரது வீட்டின் கூரை சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற பேரூராட்சிப் பணியாளா்கள் மரத்தை அகற்றி சீரமைத்தனா். தேவாலா செத்தக்கொல்லி கிராமத்தில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழைக்கு ஜீவராணி என்பவரின் வீட்டின் மீது மரம் விழுந்து வீடு சேதமடைந்தது. தகவலறிந்து சென்ற வருவாய்த் துறையினா் இடிபாடுகளை அகற்றினா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பந்தலூரில் அதிகபட்சமாக 180 மி.மீட்டரும், தேவாலாவில் 145 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் ( மில்லி மீட்டரில்):
சேரங்கோடு பகுதியில் 106, கூடலூா், செருமுள்ளியில் தலா 68, பாடந்தொரையில் 67, ஓவேலியில் 47 என மழை பதிவாகியுள்ளது.