உதகையில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக வனத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம், அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு வெள்ளிக்கிழமை முதல் இலவசமாக வழங்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் உணவைப் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.