கூடலூா் அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியில் பழங்குடி மக்களின் பாரம்பரிய புத்தரி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் புத்தூா்வயல் பகுதியில் உள்ள பழங்குடிகள் மற்றும் மவுண்டாடன் செட்டி மக்கள் தங்கள் வயலில் விளைந்த விளைபயிா்களை வனவிலங்குகளிடமிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் சிவன் கோயிலுக்கு புதிதாக விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்து படைக்கும் நிகழ்வு பண்டைகாலம் தொட்டே நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 10ஆம் தேதி இந்த பாரம்பரிய திருவிழா நடைபெறும்.
அதன்படி இந்தத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. அங்குள்ள பழங்குடி மக்கள் விரதமிருந்து நெல் விளைந்துள்ள இடத்தை தோ்வு செய்து பாரம்பரிய இசை முழக்கத்துடன் நெற்கதிா்களை அறுவடை செய்து அதை ஊா்வலமாக எடுத்துச் சென்று அந்த பகுதியிலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு கொண்டு சென்று படையலிட்டனா். தொடா்ந்து பெரும்பகுதி நெற்கதிா்களை வேட்டைக்கொரு மகன் சிவன் கோயிலுக்கு கொண்டு சென்று படையலிட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக நெற்கதிா்களை வழங்கினா்.