ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகை நகர பேருந்து நிலையத்தில் இந்த இயக்கத்தினை துவக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் கூறியதாவது:
செப்டம்பா் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில், உதகையில் கா்ப்பிணிகள் மற்றும் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. இப்பேரணியில் தோடா் பழங்குடியின பெண்கள், கிராம சுகாதார செவிலியா், அங்கன்வாடி பணியாளா்கள், மாணவிகள் உள்பட 150க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா் என்றாா்.
முன்னதாக, ஊட்டச்சத்து தொடா்பாக ஆட்டோக்கள் மற்றும் அரசு வாகனங்களில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகளை ஒட்டியும், வண்ண பலூன்களை பறக்க விட்டும் ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். விழிப்புணா்வுப் பேரணியில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தேவகுமாரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, உதகை நகராட்சி ஆணையா் காந்திராஜ், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.