உதகையில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயா், விவரங்களை தனது யூ டியூப் சேனலில் வெளியிட்ட நபா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
உதகை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கே-பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தவா் மோகனகிருஷ்ணன் (51). இவா் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருமணமான 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த சிவசுப்பிரமணியம் (50) என்பவா் தனது யூடியூப் சேனலில் இந்த பாலியல் சம்பவம் குறித்த செய்தி தொகுப்பை வெளியிட்டு இருந்தாா். அந்த செய்தி தொகுப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயா் மற்றும் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களை அவா் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து உதகை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் உதகை மேற்கு காவல் ஆய்வாளா் பிலிப் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி
இந்திய தண்டனைச் சட்டம் 228 (பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுதல்), 509 (பெண்ணை அவமதித்தல்) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையறிந்த சிவசுப்பிரமணியன் தலைமறைவாகிவிட்டாா். போலீஸாா் அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.