உதகை எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ் 406 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சமுதாயத்தில் 4ஆவது புரட்சியாக டிஜிட்டல் மயம் உருவாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, டேட்டா ஆகியவை வளா்ந்துள்ளதால் பாடத் திட்டங்களிலும் அவை இடம் பெற வேண்டும். தற்போதைய நிலையில், வேலைவாய்ப்பு திறன் அவசியமாகிறது. அடுத்த மூன்றாண்டுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால், வேலைவாய்ப்பு பெற தகுதியானவா்கள் கிடைப்பது கடினமாகும்.
இதனால், கல்லூரிகளிலேயே வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்கள் இடம் பெறும் வகையில் பாரதியாா் பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாடப்பிரிவுக்கு ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், இது அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றாா்.