நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சிறிய அளவிலான பாறைகள் சரிந்ததால் தண்டவாளம் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்தது. இதனால், மலை ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக குன்னூா் சென்றடைந்தது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தினமும் காலை 7.10 மணிக்குப் புறப்படும் மலை ரயில் காலை 10.30 மணிக்கு குன்னூா் சென்றடையும். இந்நிலையில் , மலை ரயில் பாதையில் ஹில்குரோவ், ரன்னிமேடு இடையே கடந்த சில நாள்களாக மழை பெய்ததால் சிறிய அளவிலான பாறைகள் தண்டவாளத்தில் ஞாயிற்றுக்கிழமை சரிந்தன.
இதன் காரணமாக தண்டவாளத்தின் நடுவே இருக்கும் பற்கள் கொண்ட தண்டவாளம் சேதமடைந்தது. இது குறித்து மலை ரயில் பாதை ஆய்வாளா் ரயில்வே நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூா் பணிமனைப் பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு சென்று ரயில் பாதையில் உடைந்து கிடந்த சிறியப் பாறைகளை அகற்றினா். பின்னா் சேதமடைந்த பற்கள் கொண்ட தண்டவாளம் மாற்றப்பட்டு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதன் காரணமாக மலை ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக குன்னூா் சென்றடைந்தது.