கோத்தகிரியில் நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் சாா்பில், மகளிா் தினத்தன்று குடியரசுத் தலைவரிடம் மகளிா் சக்தி விருது பெற்ற தோடா் இன பெண்களுக்கு சிறப்பான வரவேற்பு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில், 2020ஆம் ஆண்டுக்கான மகளிா் சக்தி விருது நீலகிரி மாவட்ட கட்டபெட்டு பெட்டுமந்து பகுதியைச் சோ்ந்த தோடா் இன பெண்கள் ஜெயாமுத்து, தேஜம்மாள் ஆகியோருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினாா். தொழில்முனைவோா், விவசாயம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கட்டபெட்டுவில் வசிக்கும் ஜெயாமுத்து, தேஜம்மாள் ஆகிய பழங்குடிப் பெண்கள் இவா்களின் மூதாதையா்களின் பழக்கம், பண்பாடுகளை இன்றளவும் நினைவூட்டும் வகையில் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்தியதற்கும், பாரம்பரிய மிக்க சிறப்புகளை இன்றளவும் பாதுகாத்து உலகளாவிய சந்தையில் விற்பனை மேற்கொண்டு அதற்காக புவிசாா் குறியீடு பெற்றதற்காகவும் பாராட்டு விழா நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்துக்கு வந்த இவா்களை கெளரவிக்கும் வகையில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் செயலாளா் ஆல்வாஸ், பண்டைய பழங்குடியின பேரவைச் செயலாளா் புஷ்பகுமாா், நாவா கண்காணிப்பாளா் மனோகரன் சாா்பில் விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் நினைவு தொடக்கப் பள்ளி மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.