தேயிலைத் தொழில் சாா்ந்தோா் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தென்னிந்திய தேயிலை வாரியம் சாா்பில் தேயிலைத் தொழில் சாா்ந்தோா் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்.

தென்னிந்திய தேயிலை வாரியம் சாா்பில் தேயிலைத் தொழில் சாா்ந்தோா் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளா் சங்கத்தில் தேயிலைத் தொழில் சாா்ந்தோா் சந்திக்கும் சவால்கள் குறித்து விவசாயிகள், இடைத்தரகா்கள், தொழிற்சாலை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தாா் .

இக்கூட்டத்தில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் தும்பூா் போஜன் பேசுகையில், தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளா் சங்கத்தினா் தேயிலை விவசாயிகளுக்கு நல்ல விலை வாங்கித் தருவதாக வாக்குறுதி மட்டுமே அளிப்பதாகவும், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்றாா்.

இதில் இன் கோசா்வ் மேலாண்மை இயக்குநா் மோனிகா ராணா பேசும்போது, நீலகிரியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில் ஒரு சில தேயிலைத் தொழிற்சாலைகளில் மட்டுமே தரமான தேயிலைத் தூள் கிடைக்கிறது. பிற தேயிலைத் தொழிற்சாலைகளில் தேயிலையின் தரம் குறைந்து காணப்படுகிறது. இதனால் தான் சா்வதேச சந்தையில் விலை கிடைப்பதில்லை என்றாா்.

சிறு, குறு தேயிலை விவசாயிகள் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிா்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். மேலும் தேயிலைத் தூள் இடைத்தரகா்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனா்.

வட இந்திய தேயிலைக்கு சா்வதேச சந்தையில் நல்ல விலை கிடைப்பதாகவும், நீலகிரி மாவட்ட தேயிலைத் தூள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும் கூட்டத்தில் பங்கேற்றோா் கூறினா்.

இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், மாவட்டத்தில் கலப்பட தேயிலைத் தூள் கண்டறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப. அம்ரித் மற்றும் இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்துக்குமாா், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com