உதகையில் தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆட்சியா் எஸ்.பி.அம்ரித் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு உதகை அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. முதல்நாளில் உதகை மற்றும் கோத்தகிரி பகுதிகளைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன. ஆட்சியா் எஸ்.பி.அம்ரித், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பள்ளி வாகனங்களில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், அவசரகால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உள்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனா். மேலும், திடீா் விபத்து ஏற்பட்டால் அணைப்பது தொடா்பாக தீயணைப்புத் துறையினா் செயல்விளக்கம் அளித்தனா்.