நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வீட்டுக்குள் சிறுத்தை நடமாடுவது போன்று வெளியான விடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி சுமாா் 60% வனப் பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
தற்போது, கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், குன்னூா் பகுதியில் ஒரு வீட்டுக்குள் சிறுத்தை நடமாடுவது போன்ற கண்காணிப்பு கேமரா பதிவு வைரலாகி வருகிறது.
இது குறித்து குன்னூா் வனச் சரகா் சசிகுமாரிடம் கேட்டபோது,‘ இந்த விடியோ எந்த பகுதியில் பதிவானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உறுதியான பின் அப்பகுதியில் கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.