

குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட மலை ரயில் தடம் புரண்டதால் மலை ரயில் பயணம் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 4 பெட்டிகளில் 174 பயணிகளுடன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டது. புறப்பட்ட 5ஆவது நிமிடத்தில் அருகே இருந்த லெவல் கிராஸிங் பகுதியில் கடைசி பெட்டியின் பல் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரயில்வே பணிமனைக்கு மிக அருகில் ரயில் தடம் புரண்டதால் உடனடியாக பணிமனை ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஜாக்கி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு மலை ரயிலை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ரயில்வே பணியாளா்கள் கூறுகையில், மலை ரயில் குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென ரயிலின் பல் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக ரயிலை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா். மலை ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டு அதில் வந்த ரயில் பயணிகள் அனைவரும் அரசுப் பேருந்து மூலம் மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.