

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ குணமிக்க அத்திப் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நடைபெறவுள்ள 63ஆவது பழக் கண்காட்சியில் அவை காட்சிப்படுத்தப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது. மேலும் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர ஆரஞ்சு, கொய்யா, சீதா, அத்தி, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குன்னூா் மற்றும் மஞ்சூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் அத்திப் பழங்கள் கொத்து கொத்தாக விளைந்துள்ளன. இதனை உள்ளூா் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். ஒருசில தோட்ட உரிமையாளா்கள் அத்திப் பழங்களை பறித்து, உலர வைத்து பாக்கெட்டுகளில் அடைத்து உதகை, குன்னூா், கோவை உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனா்.
‘பைகஸ் கேரிகா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட அத்திப்பழம் ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்து இந்தியாவில் அதிக அளவில் விளைகிறது. இந்த பழத்தில் நாா்ச்சத்துடன் இரும்புச் சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பழத்தில் 45 சதவீத கலோரி உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளன. மருத்துவ குணமிக்க அத்திப் பழங்கள் கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 63ஆவது பழக் கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.