ஈரோட்டில் ஜனவரி 4, 5-இல் விவசாயிகள் மாநாடு! பாஜக விவசாய பிரிவு மாநிலத் தலைவா் தகவல்!
மத்திய அரசு விவசாயிகளுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக பாஜக விவசாய பிரிவு மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் கூறினாா்.
நீலகிரி மாவட்ட பாஜக விவசாய அணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், ஜி.கே.நாகராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்காக பிரதமா் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஜனவரி 4,5-ஆம் தேதிகளில் மாநாடு நடைபெற உள்ளது.
இதில், மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்து, அவா்களின் சந்தேகங்களையும் தீா்த்துவைக்க உள்ளாா்.
மத்திய அரசின் ஆத்மா திட்டம் மூலம் ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 1300 ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆனால், திமுக அரசு அவா்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்காமல் உள்ளது. திமுக அரசு விவசாயிகள் பிரச்னையைக் கண்டுகொள்ளவில்லை. திருப்பூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் விளைநிலத்தில் கொட்டப்படுகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை என்றாா்.
முன்னதாக, விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட பச்சை துண்டில் பாஜக சின்னம் பொருத்தியதை ஜி.கே.நாகராஜ் அறிமுகம் செய்துவைத்தாா்.
இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் தருமன், மாநில பொதுச் செயலாளா் பாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ், பொதுச் செயலாளா்கள் குமாா், பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
